ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் - 2

Image



ஐக்கிய நாடுகள் சபைக்கான கருத்து வடிவம் எவ்வாறு உருவானது என்பதை கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

1920-களில் உருவாக்கப்பட்ட உலக நாடுகள் சங்கம் ' The League of Nations ' ஓரளவு அரசியல் வெற்றியை பெற்றிருந்தாலும், 1930-களில் இருந்து எளிதில் தீர்க்க முடியாத பல மோதல்களையும் சவால்களையும் சந்திக்க நேர்ந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற சக்திவாய்ந்த நாடுகள் இந்த அமைப்பை விட்டு வெளியேறியது மட்டுமல்லாது, 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்து உலகமே செய்வதறியாது திகைத்து நின்ற காலப்பகுதியில், இவ்வமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றான கூட்டுப் பாதுகாப்பு குறித்த நிறைவேறாத வாக்குறுதி காரணங்களால் இதன் செயற்பாடுகள் கைவிடப்பட்டது. எது எப்படியென்றாலும் இந்த அமைப்பினுடைய முயற்சிகள் முழுவதுமாக தோல்வியடைந்து கைவிடப்பட்டது என கூற முடியாது ஏனெனில் இரண்டாம் உலக யுத்தம் நடை பெற்று கொண்டிருந்தவேளை நட்பு நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை என்ற புதிய அமைப்பை உருவாக்க திட்டங்களை அமைத்தன.

அட்லாண்டிக் சாசனம்

ஆகஸ்ட் 14, 1941 அன்று அமெரிக்காவின் 32-வது ஜனாதிபதி பிராங்கிளின் D. ரூஸ்வெல்ட்(Franklin De Roosevel) இங்கிலாந்தின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Churchill) ஆகியோர் இணைந்து தீவிரமாக போர் நடந்துகொண்டிருந்த அட்லாண்டிக் கடலில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ஒரு கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர். இது வரலாற்றில் அட்லாண்டிக் சாசனம் என அறியப்படுகிறது. அன்றைய மிகப் பெரிய இரு ஜனநாயக தலைவர்களிடமிருந்து வந்த உறுதி மொழி மட்டுமல்லாது அமெரிக்காவின் முழு தார்மீக ஆதரவையும் குறிக்கும் வகையில் இது அமைந்திருந்ததால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தோற்றுவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 1, 1942 அன்று, 26 நாடுகளின் பிரதிநிதிகள் வாஷிங்டனில் கூடி அட்லாண்டிக் சாசனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் கையெழுத்திட்டு தமது ஆதரவை தெரிவித்தன. இங்கு தான் அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் உருவாக்கிய ஐக்கிய நாடுகள் என்ற பெயர் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

நான்கு சக்தி பிரகடனம்(four-power Declaration) கொடூர யுத்தத்தில் ஏற்பட்ட பாரியளவிலான உயிர் சேதங்களை தொடர்ந்து 1943-ல் நேச நாடுகள் ஒன்றிணைந்து அனைவரும் சுதந்திரமாக பயமின்றி வாழும் ஒரு சூழ்நிலையை உருவாக்க முன் வந்தன. அக்டோபர் 1943 இல் கிரேட் பிரிட்டன்( Great Britain)

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஒரு உலக அமைப்பிற்கான அடிப்படை வரையறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 30 அன்று, மாஸ்கோ பிரகடனத்தில் சோவியத் யூனியனுக்கான சீனத் தூதர் வியாச்ஸ் மோலோடோவ்,( Vyaches Molotov) அந்தோனி ஈடன்,( Anthony Eden) கோர்டெல் ஹல்(Cordell Hull) மற்றும் ஃபூ பிங் ஷென்(Foo Ping Shen) ஆகியோர் கையெழுத்திட்டனர். இது நான்கு சக்தி பிரகடனம்(four-power Declaration) என்று அழைக்கப்படுகிறது. 1943-ம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் முதன்முறையாக சந்தித்த ரூஸ்வெல்ட், ஸ்டாலின் மற்றும் சர்ச்சில் ஆகியோர் ஒருங்கிணைந்த திட்டங்களை வகுத்து விட்டதாக அறிவித்ததை தொடர்ந்து, ஒரு வெற்றியின் படிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

Dumbarton Oaks-மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையில் இருக்க வேண்டிய அடிப்படை கோட்பாடுகள் வகுக்கப்பட்டதின் பின்னர், கொள்கைகளையும் நோக்கங்களையும் கட்டமைப்புகளாக மாற்றி, மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டியிருந்தது. 7 October 1944 அன்று வாஷிங்டன், டி. சி. யில் நடைபெற்ற Dumbarton Oaks- மாநாட்டினை தொடர்ந்து உலக அமைப்பின் கட்டமைப்பிற்கான ஒரு திட்டம், நான்கு பெரியசக்தி நாடுகளால் ஐக்கிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் ஆய்வு மற்றும் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இத்திட்டம் பற்றி ஒரு விரிவான வர்ணனையை வெளியிட்டதுடன், அமெரிக்காவில், வெளியுறவுத்துறை 1,900,000 பிரதிகள் விநியோகித்து திட்டங்களை விளக்க ஏற்பாடு செய்தது இங்கு முக்கியமானதாக கருதப் படுகிறது. இந்த புதிய திட்டத்திற்கும் The League of Nations உடன்படிக்கைக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. Dumbarton Oaks திட்டத்தில் தவற விடப்பட்ட பாதுகாப்பு சபையில் வாக்களிக்கும் முறை 11 பெப்ரவரி 1945-ல் நடைபெற்ற Yalta மாநாட்டில் நிவர்த்தி செய்யப்பட்டு சான் பிரான்சிஸ்கோ மாநாட்டிக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

ஜனாதிபதி பிராங்கிளின் D. ரூஸ்வெல்ட் மரணம்

இந்த வேளையில் தான் யாரும் எதிர்பாராத அந்த சோக செய்தி இடியாய் இறங்கியது. ஆம் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்க யார் இரவு பகலாக உழைத்து உருவம் கொடுத்தாரோ அந்த மாமனிதர் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இறைவனடி எய்தினார். இம்மாநாடு ஒத்திவைக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவியபோதிலும், ஜனாதிபதி ட்ரூமன் அவர்கள் ஏற்கனவே செய்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடிவு செய்து நியமிக்கப்பட்ட திகதியில் இம்மாநாட்டை நடாத்தி வரலாறை எழுதினார்.

1945 ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. அது மட்டுமல்ல ஏற்கனவே உலக நாடுகள் சங்கத்தில் ( The League of Nations ) நடைமுறையில் இருந்த பல நடவடிக்கைகளை புதிய வடிவத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்தது. உதாரணமாக பொருளாதார நடவடிக்கைகள் யாவும் புதிய சமூக பொருளாதார மன்றத்திற்கு (Economic and Social Council) மாற்றப்பட்டதுடன்,சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பாக (WHO) உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது.

ராஜி பாற்றர்சன்