இந்திய அரசின் 111 சான்றிதழ்களை பெற்ற குவைத் தமிழர்

Image



இந்திய அரசு MyGov Quiz (www.quiz.mygov.in) என்ற இணையத்தில் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் சார்பாக வினாடி வினாக்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த வினாடி வினா, அரசின் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள், நல்ல நிர்வாகத்தைப் பற்றிய குடிமக்களின் புரிதலை அதிகரிப்பது மற்றும் நல்லாட்சி குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய கூட்டுத் தேடலை வலுப்படுத்துவதையும், பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மற்றும் பலன்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வினாடி வினா தொடரில் பெருமளவில் பங்கேற்பது அடிமட்ட அளவில் அரசாங்க ஈடுபாட்டை ஆழமாக்கும். குறிப்பிட்ட நேரங்களில் வினாக்களுக்கு சரியான விடைகளை அளிக்க வேண்டும். வெற்றியாளர்களுக்கு தரக்குறியீடுகளுடன் பங்கேற்பாளர் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சில போட்டிகளில் பணப் பரிசுகளும் வெகுமதிகளாக தரப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் அறிவை சோதிக்க அழைப்பு விடுத்துள்ளது இந்திய அரசு. இந்த அழைப்பை ஏற்ற பலரில் குவைத் வாழ் தமிழரான பரங்கிப்பேட்டை கலீல் பாகவீயும் ஒருவர்.

இவர் பல்துறை வல்லுனர், பல்வேறு விருதுகளை பெற்றவர், ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், மக்கள் நல பணியாளர், விமர்சகர், பத்திரிகையாளர், சமூக சேவகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், ஊடகவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர், குவைத்திலும், தமிழகத்திலும் சமூக, சமய, கல்வி, மொழி, கலை, இலக்கிய, ஊடக, அரசியல் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர். உலகளவில் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு நடத்தும் இந்த போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று இதுவரை 111 சான்றிதழ்களை பெற்றுள்ளார் கலீல் பாகவீ,

* "இயற்கையிலேயே தேடல் ஆர்வமுள்ளவன் நான். சிறு வயதிலிருந்தே எல்லா விதமான போட்டிகளில் பங்கேற்பதை தொடர்ந்து செய்து வருகின்றேன். பரிசுகளை எதிர்பார்த்து எதிலும் நான் பங்கேற்பதில்லை. பார்வையாளராக இருப்பதை விட பங்கேற்பாளராக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். வெற்றி தோல்வி என்பது நிலையானது அல்ல. போட்டிகளில் பங்கேற்றவன் என்ற பெயரே நமக்கு திருப்தியை தர போதுமானது. அந்த வகையில்தான் இந்திய ஒன்றிய அரசு நடத்துகின்ற இந்தப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றேன். நிறைய தகவல்களை இதனால் தெரிந்து கொள்ள முடிகின்றது. சில வரலாற்று இருட்டடிப்பு தகவல்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. மக்கள் அனைவரும் இது போன்ற போட்டிகளில் வயது வித்தியாசமின்றி பங்கேற்க வேண்டும். நமது தமிழ்நாடு அரசும் இதுபோன்ற போட்டிகளை நடத்தி தமிழின வரவாற்றையும், தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் செயற்திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்" என சொன்னார்.