கத்தாரில், ரமலான் 2023 - கவியரங்கம்

Image



தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் "காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் தலைமையில் "ரமலான் - 2023" எனும் தலைப்பில் கவியரங்கம் இலங்கை பாரம்பரிய உணவகமான "வெல் ஆன் ஹெரிடேஜ்" உணவகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த கவிஞர்கள் சுல்தான் பைசர், முஹம்மத் ஹசன், முஹம்மத் சமீன், ரியாஸ் மொஹமட், இம்திஸாஹசன் றெளஸான், ஆகிய ஐவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் தஞ்சாவூரான், முகமது நிசார், செந்தமிழ் செல்வி ஆகிய மூவரும் பங்குகொண்டு சிறப்பாக தங்களது கவிதைகளை சமர்ப்பித்தனர்.

கவியரங்கத் தலைமை வகித்த ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் பேசும்போது, தமது கலை, இலக்கிய பயணத்தைப்பற்றியும், தமது இலக்கிய பயணத்தில் ஊடகவியலாளர்கள் பெருந்துணையாய் நின்றதையும், ஊடகவியலாளர்கள் இன்றேல் என்னைப்போன்ற கவிஞர்கள், கலைஞர்கள் உலகுக்கு அடையாளம் காட்டப்படாமல் போயிருப்பார்கள் என்றும், தாம் ஊடகத்துறையை சார்ந்த நண்பர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்லிக்கொள்வதாகவும் நெகிழ்வுடன் பேசினார்.

மேலும், வளரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமது வாசிப்பையும், எழுதும் பழக்கத்தையும், வழமையாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் இடையில் தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வினை இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்வினை முஹம்மத் முனவ்வர் அவர்கள் அழகாக தொகுத்து வழங்கினார். இக்கவியரங்க நிகழ்விற்கு தமிழகத்தின் "மனிதநேய கலாச்சாரப் பேரவை" யும் அனுசரனையாளர்களில் ஒருவராக ஆதரவு தந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.

கவியரங்கம் பிற்பகல் 3: 30 மணிக்குத் தொடங்கி, நோன்பு திறப்பு விருந்தோம்பலுடன் நிறைவுற்றது.